வெண்நிலா வீடு திரைவிமர்சனம்

ADVERTISEMENTS
ADVERTISEMENTS
7நகை மோகத்தால்., அதுவும் இரவல் நகை மோகத்தால் ஒரு குடும்பம் நடுத்தெருவிற்கு வரும் கதை தான் வெண்நிலா வீடு மொத்த படத்தின் கதையும்.அதில் ஆங்காங்கே குத்த வெச்ச மாதிரி ரியல் எஸ்டேட் கதிடுதித்தங்களையும் கிராமத்து நட்பையும் நகரத்து நட்பு, நடப்புகளையும், வீடியோ வில்லங்கங்களையும் கலந்து கட்டி வெண்நிலா வீட்டை புதியதொரு பாணியில் பொன்நிலாவாக ஜொலிக்க வைத்திருக்கின்றனர்.


கதைப்படி., கதையின் நாயகன் கார்த்திக் எனும் செந்தில்குமாரும், நாயகி தேன்மொழி எனும் விஜயலட்சுமியும் உறவுக்காரர்கள் என்றாலும் உயிர் காதலால் இணைந்தவர்கள். பணிநிமித்தம் கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வரும் இந்த ஜோடி., கை நிறைய சம்பளம், அடுக்குமாடி குடியிருப்பு வாழ்க்கை, செல்லமகள் வெண்நிலா என நகரத்தில் சொர்கத்தை பார்க்கின்றனர். இச்சமயத்தில் முதலாளி வீட்டு திருமணத்திற்காக அடுத்த வீட்டு தோழி இளவரசி எனும் சிருந்தா ஆசாப்பிடம் காதல் கணவனின் கண்டிப்பையும் மீறி இரவல் நகை வாங்கி போட்டு போகும் விஜயலட்சுமி., புருஷனின் கண் எதிரிலேயே அந்த விலைஉயர்ந்த நகையை களவு கொடுக்கிறார். போலீஸில் புகார் கொடுத்தும் நகை கிடைத்தபாடில்லை. அதனால், கார்த்திக்-தேன்மொழி தம்பதிகளின் மானம் போய், மரியாதை போய், அந்தரங்கமும் பறிபோய் உறவும், உயிரும் போகிறதா? இல்லையா...? என்பது தான் வெண்நிலா வீடு படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதை !


கதையின் நாயகனாக கார்த்திக்காக சரவணன்-மீனாட்சி புகழ் செந்தில்குமார்., பப்பாளி்கு அப்புறம் பப்பாளியை விட மேலாக ஹீரோ செந்திலுக்கு பேசப்படவிருக்கும் படம் ! ஆனால் செந்தில்குமார், சோகம், சந்தோஷம், துக்கம், தூக்கம், காதல், காமெடி எல்லாவற்றிலும்...ஒரே மாதிரி முகபாவம் காட்டுவது தோஷம் ! அடுத்தடுத்த படங்களில் கூத்துப்பட்டறைக்கு போய்விட்டு வந்து கூத்து கட்டுங்கள் ப்ளீஸ் !


கதாயின் நாயகி தேன்மொழியாக விஜயலட்சுமி, அகத்தியன் சார் பொண்ணுகிட்ட அப்படி ஒரு நடிப்பும், துடிப்பும் கொட்டிகிடக்குது. ஆனாலும் தமிழ் சினிமா அம்மணியை தட்டி கழிப்பது இந்த படத்திற்கு அப்புறம் குறையும்..., என நம்புவோமாக ! அதிலும் இரவல் நகைக்காக ஏங்கி ஒரு வழியாக கணவரை சம்மதிக்க வைத்து சாதிப்பதும் அதனாலேயே இறுதியில் தூக்கில் தொங்கி சாவதுமாக அம்மணி நம் கண்களின் ஓரம் கண்ணீர் வர வைத்து விடுகிறார். கீப் இட் அப் விஜயலட்சுமி !


இரண்டாம் நாயகி இளவரசியாக வரும் சிருந்தா ஆசாப், இவரது அப்பாவாகவும், வில்லனாகவும் வரும் மோகன்வேலு முத்துராமன், நாயகனின் கிராமத்து நண்பர்கள் ப்ளாக்பாண்டி, சரவணன், செந்தில், தமிழ்செல்வி, குடிகார அக்கா புருஷன் ஐந்து கோவிலான், சித்தப்பா அவன்இவன் ராம்ராஜ் உள்ளிட்ட ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். அதிலும் ஐந்துகோவிலான் கிராமத்து குடிகார அக்கா புருஷனாகவே அசத்தியிருக்கிறார். பேஷ், பேஷ் !


டி.கண்ணனின் ஒளிப்பதிவில் வெண்நிலா வீடு ஜொலிக்கிறது. கிராமப்புறங்களிலும் சரி, நகர்புறங்களிலும் சரி ! தன்ராஜ் மாணிக்கத்தின் இசையில் திரையுலக பிரபலங்கள் சிவகார்த்திகேயனில் தொடங்கி வெங்கட்பிரபு, பிரேம்ஜி வரை வரும் அந்த அதிரடி பாடல் அசத்தல் ! ஐந்துகோவிலானின் வசனத்தில் ஆங்காங்கே புதிய வார்த்தைகள் வார்ப்புகள், சிந்திக்க வைக்கின்றன.


வெற்றி மகாலிங்கத்தின் இயக்கத்தில் பெண்ணின் இரவல் நகை மோகத்தால் வரும் பிரச்னைகள், ரியல் எஸ்டேட் திருட்டுதனங்கள், வீட்டுக்குள்ளேயே வந்து விட்ட வீடியோ காமிரா விபரீதங்கள்...உள்ளிட்ட விஷயங்கள் விலாவாரியாக அதே நேரம் சுவாரஸ்யமாக அலசப்பட்டிருப்பது பாராட்டுதலுக்குரியது!


" மொத்தத்தில் வெண்நிலா வீடு - வெற்றி உலா பாடும் பாரு !
ADVERTISEMENTS