தமிழ்ப்படம் திரைவிமர்சனம்

ADVERTISEMENTS
ADVERTISEMENTS
தமிழ் சினிமாவை கிண்டலடித்து எடுக்கப்பட்டிருக்கும் முழுநீள காமெடி தமிழ் திரைப்படம்தான் தமிழ்ப்படம்!

கதைப்படி, அந்த கிராமத்தில் ஆண் குழந்தை பிறந்தாலே ஆகாது எனும் ஐதீகம் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வர., அந்த ஊர் மொக்கை பெரியார்தாசனுக்கு பிறக்கும் ஆண் குழந்தையை அவரே மருத்துவச்சி பரவை முனியம்மா மூலம் கள்ளிப்பால் கொடுத்து கொல்லச் சொல்லி அனுப்புகிறார். கொல்லை வழியாக குழந்தையை தூக்கிக் கொண்டு கூட்ஸ் வண்டியில் தப்பிக்கும் பரவையோ சென்னைக்கு வந்து ஒரு குடிசைப் பகுதியில் குழந்தையை வளர்த்து ஆளாக்குகிறார். ஒரே சண்டை காட்சியில் சைக்கிள், பெடல் சுற்ற... வளர்ந்து ஆளாகும் குழந்தை, ஊர் பிரச்னையில் எல்லாம் மூக்கை நுழைத்து அடுத்த சில காட்சிகளில் பரத், நகுல், சித்தார்த் ஆகியோருக்கு நண்பன் ஆகி ரோட்டோரம் திருட்டு தம்மும் கையுமாக பிகர் வெட்டுகிறது. கதாநாயகி திஷா பாண்டடேவை பார்த்ததும் நண்பர்கள் சொன்னது மாதிரியே சாலையோரம் எங்கோ மணி அடிக்க அவர் முகத்தில் பிரகாசமாக பல்ப் எறிய காதல் தீ பற்றுகிறது. அதன் பின் ஹீரோ ஷிவா, கோடீஸ்வரி திஷா பாண்‌டேயை பெண் கேட்டு அவர் வீட்டுக்கு போக, அவரது வசதியான அப்பால ஷிவாவின் ஏழ்மையை சுட்டிக்காட்டி பெண் தர மறுக்கிறார். என் ஏழ்மைதானே உங்கள் குறை நான் கோடீஸ்வரனாகி வருகிறேன் எனச் சொல்லி திஷாவின் அப்பாவிற்கு காப்பி வருவதற்குள், பால் பாக்கெட் போட்டு, பேப்பர் போட்டு, கார் துடைத்து காசு சம்பாதித்து திரும்பிய திசையெல்லாம் ஷிவா பெயரில் பிஸினஸ் ஆரம்பித்து பெரிய புள்ளியாகி, பெரிய காரில் வந்து திஷாவை பெண் கேட்கிறார். சொன்னபடி திருமணத்திற்கு சம்மதிக்கிறார் பெண்ணின் அப்பா. அப்புறம் என்ன... நினைத்தபடி திருமணம், சுபம்... என எண்ணினால் அதுதான் இல்லை. திருமண ‌மேடையில் விருந்தாளியாக வந்த சிலர் ஷிவா அப்பன் பேர் தெரியாதவர் எனக் கூற., அதனால் என்ன? என பெண் வீட்டிர் மறுத்தும், அப்பாவையும், குடும்பத்தையும் தேடி பாட்டி தந்த பேமிலி பாட்டுடன் ஊருக்கு புறப்படும் ஷிவா, அப்பாவையும், குடும்பத்தையும் கண்டு பிடித்தாரா, திஷா பாண்‌‌டேயை திரும்பி வந்து கைப்பிடித்தாரா? என்பது மீதிக்கதை!

கருத்தம்மா படத்தில் தொடங்கி தளபதி, சின்னத்தம்பி, அபூர்வ சகோதரர்கள், என் ராசாவின் மனசிலே, மொழி என சகல தமிழ் சினிமாக்களையும் வுட்டு ஓட்டியிருக்கும் தமிழ்ப்படத்தில் விஜய், அஜித், கமல், ராஜ்கிரண், முரளி, கார்த்திக், பிரபு என உச்ச நடிகர் முதல் ஓய்ந்த நடிகர் வரை யாரையும் தப்ப விடவில்லை. ஒரு சண்டைக்காட்சியை வெயிட்டிங்கில் விட்டு, சிறுவன் சைக்கிள் பெடலை சுற்றி ஹீரோ ஷிவாவாகி விட்டு, அத‌ன் பிறகு பைட் முடிக்கும் ஆரம்ப பார்முலாவிலேயே தமிழ் சினிமாவின் தப்பிதங்களை பட்ட வர்த்தனமாக படம் பிடித்து காட்ட ஆரம்பிக்கும் இயக்குனர் சி.எஸ்.அமுதன், இறுதிவரை அந்த பெப் குறையாமல் பார்த்துக் கொள்வதுடன் அழகான ஒரு காதல் கதையையும் நல்லதொரு மெசேஜையும் இத‌னூடே சொல்ல முயற்சித்திருப்பது சபாஷ் சொல்ல வைக்கிறது.

ஷிவாவின் தோழர்களாக, கல்லூரி மாணவர்களாக பரத் எனும் பெயரில் வெ.ஆ.மூர்த்தியையும், நகுலாக எம்.எஸ்.பாஸ்கரையும், சித்தார்த்தாக மனோபாலாவையும் இளம் தமிழ் சினிமா ஹீரோக்கள் பெயரில் புத்தகமும் கையுமாக அலைய விடுவதில் தொடங்கி, பேமிலி பாட்டு என ஒரு இங்கிலீஷ் பாட்டை போட்டு ‌பெரியார்தாசனை ஷிலா கண்டுபிடிப்பது வரை செம நக்கல்... நையாண்டி!

படக்காட்சிகளில் மட்டுமின்றி பாடல் காட்சிகளிலும் தமிழ் சினிமா பாடல்களில் இடம்‌பெறும் புரியாத வார்த்தைகளை சாடி ஓமகசியா... என ஒரு பாடல் காட்சியே வைத்திருக்கும் இயக்குனர் பாடல் காட்சி ஒன்றில் உங்கள் ஷிவா இப்பாடலை பாடுகிறார் என கார்டு போட்டு நம் ஹீரோக்களின் பெருந்தன்மையை கிண்டலடித்திருப்பது பிரமாதம்!

இப்படி தமிழ் சினிமாவை சாடும் துணிச்சலான ஒரு படத்தை வழங்க தயாநிதி அழகிரி தவிர வேறு யாராலும் முடியாது. தமிழ் சினிமா உலகமும் வேறு யாரையும் விடாது!
ADVERTISEMENTS