கந்த கோட்டை திரைவிமர்சனம்

ADVERTISEMENTS
ADVERTISEMENTS
தன் பெற்‌றோர் காதல் திருமணம் செய்து கொண்டு சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் சண்டை போட்டுக் கொள்வதால் காதலர்களை கண்டாலே, அவர்களை பிரித்து விடும் நாயகனுக்கு, காதலர்களை சேர்த்து வைக்க போராடும் நாயகிக்கும் இடையில் காதல் கண்ணாமூச்சி காட்டுவதே கந்தகோட்டை கதை.

சென்னை, கந்தகோட்டை காலனியில் காதல், காதலர்கள் என கேள்விபட்டாலே கல்லால் அடிக்காத குறையாக அவர்களை பிரிக்கிறார் ஹீரோ நகுலன். அவரது தங்கைக்கும், அதே காலனியில் வசிக்கும் நாயகி பூர்ணாவின் பெரியம்மா மகனுக்கும் காதல். அவர்களை சேர்த்து வைப்பதற்காக நாகர்கோயிலில் இருந்து வருகிறார் நாயகி. இவரும், இவரது நண்பர்களும் காதலர்களை சேர்த்து வைக்கும் கோஷ்டி! நகுலனை மீறி பூர்ணா காதலர்களை சேர்த்து வைத்தாரா, நகுலனின் ஆதரவுடன் அவர்களை சேர்த்து வைத்தாரா, நகுலன் - பூர்ணா காதலித்தார்களா? இவர்களது காதலை பிரிக்க யாராவது முற்பட்டார்களா? உள்ளிட்ட இன்னும் பல எதிர்பார்த்த, எதிர்பார்க்க முடியாத கேள்விகளுக்கெல்லாம் வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும், சூடாகவும் - சுவையாகவும் பதில் சொல்கிறது கந்தகோட்டை படம்!

காதலர்களை பிரிப்பதற்கு தன் பெற்றோர்களை காரணம் காட்டும் நகுலனின் நடிப்பும், துடிப்பும் இளமை துள்ளலுடன் படத்திற்கு பலம் சேர்க்கிறது. கதாநாயகி பூர்ணாவும், நகுலனின் இளமை துள்ளல் நடிப்பிற்கு ஈடு கொடுத்து சிறப்பாக நடித்திருக்கிறார். நகுலனின் அப்பாவும், அம்மாவும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வது, அதன்பின் மிகுதியால் போட்டுக்கொள்ளும் செல்லச் சண்டை,. காதல் சண்டை என நகுலனுக்கு புரிய வைத்து அவர் மனதிற்குள்ளும் காதலை ஏற்படுத்தும் இடத்தில் பூர்ணா நடிப்பில் நாயகரைக் காட்டிலும் மிளிர்கிறார்.

நாயகர் நகுலனின் நண்பர்களாக காமடி சந்தானம், பூச்சி செந்தில், கூல் சுரேஷ் கோஷ்டி பண்ணும் சேட்டைகள் தியேட்டரை கைத் தட்டலால் அதிர வைக்கின்றன. வழக்கமாக சிங்கிள் ஆளாக நின்று டபுள் மீனிங் டயலாக்குகளால் ஒரு சாரரை மட்டும் சிரிக்க வைக்கும் சந்தானம், இதில் பூச்சி செந்தில் கோஷ்டியுடன் சேர்ந்து கொண்டு டபுள் மீனிங், டபுள் காதலி என அனைத்து தரப்பினரையும் அகமகிழச் ‌செய்து அசத்தி இருக்கிறார். சபாஷ்! சந்தானமும், பூச்சி செந்திலும் கவுண்டமணி - செந்தில் காமடி ஜோடியை ஞாபகப்படுத்தவும் தவறவில்லை. பேஷ்! பேஷ்!!

கதையில் பரிதாபத்துக்குரிய பாத்திரமாக வாழ்ந்து மடியும் சண்டைக்கோழி ராஜா, அவரது அதிரடி அண்ணாச்சி அப்பாவாக சென்னை -28 சம்பத், பாலாசிங், சிவரஞ்சனி, என்பீல்ட் ரவி, சத்யம் சேரன்ராஜ், ராஜேந்திரன் உள்ளிட்டவர்களும் தங்கள் பங்கை சரியாக செய்துள்ளனர்.

எதிர்பாராத திருப்பங்களை எக்கச்சக்கமாக புகுத்தி, வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் கதை சொல்லி வெற்றி பெற்றிருக்கும் இயக்குனர் சக்திவேல் எஸ்.க்கு, இசையமைப்பாளர் தினாவில் தொடங்கி, ஒளிப்பதிவாளர் கிருஷ்ணசாமி, எடிட்டர் சுராஜ் கவி, நடன அமைப்பாளர் சுப்ரீம் சுந்தர், சண்டை பயிற்சியாளர் அசோக் ராஜ், காஸ்ட்யூமர் உள்ளிட்ட அனைவரும் பெரிய பக்கபலமாக இருக்கின்றனர்.
ADVERTISEMENTS