பிரபல படத்தயாரிப்பு நிறுவனங்களிலும், பிரபல இயக்குனர்களின் திரைப்படங்களிலும், தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்த அனுபவம் வாய்ந்தவர் கே.முருகானந்தம். இவர் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் திரைப்படம் தான் முருகாற்றுப்படை!.
கதைப்படி, கட்டுமான நிறுவன அதிபரின் ஒற்றை வாரிசு புதுமுகம் சரவணன். பொறியியல் கல்லூரியில் படிக்கிறார். படித்து முடித்ததும் அப்பாவின் தொழிலை மேலும் திறம்பட நடத்தும் முடிவில் இருக்கும் அவருக்கும், உடன் படிக்கும் அறிமுக நாயகி நவீக்காவிற்கும் காதல் பிறக்கிறது. கல்வியும், காதலும் அமர்க்களமாக போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் சரவணனின் அப்பாவுக்கும், அவரது தொழிலுக்கும் உபத்திரம் தருகின்றனர் லோக்கல் அரசியல் ரவுடிகள். அதற்கு பின்னணியில், அமைச்சர் ஒருவரும் இருக்கிறார். அவர்கள் அத்தனை பேரையும் தன் பொறியியல் படிப்பு பணிக்கு இடையில், களப்பணி ஆற்றி கண்டுபிடித்து சட்டத்தின்முன் நிறுத்தி., அப்பாவின் பிஸினஸிலும், தன் காதலிலும் ஹீரோ சரவணன் வெற்றி பெறுவது தான் முருகாற்றுப்படை மொத்தமும்!.
புதுமுக நாயகன் சரவணன்., கல்லூரி மாணவர் கதாபாத்திரத்திற்கு ஓகேவாக இருக்கிறார், என்றாலும், நடிகர் விஜய் ரேஞ்சுக்கு அவரை கயிறு கட்டி தூக்கி எதிரிகளை பந்தாடவிடுவதும், நாயகியுடன் ஆடிப்பாடி ரசிகர்களை ஓடவிடுவதும் சற்றே ஓவர்!. அடுத்தடுத்த படங்களில், என்னதான் புரொடியூசர் மகன் என்றாலும்., சரவணன் அடக்கி வாசித்தால் முன்னுக்கு வரலாம்!.
அறிமுக நாயகி நவீக்கா, குத்து ரம்யா - திவ்யாவின் சாயலில் கொழுக்-மொழுக் என்று இருக்கிறார். ஆனாலும், குளோசப் காட்சிகளில் அவரது பால்வடியும் முகம், ரசிகர்கள் எதிர்பார்க்கும் பெப்பிற்கும், கிக்கிற்கும் பெப்பே காட்டுகிறது!.
ரமேஷ்கண்ணா, தேவதர்ஷினி, ராஜசிம்மன் உள்ளிட்ட இன்னும் பலரும் படத்தில் இருக்கிறார்கள்., படுத்தி எடுக்கிறார்கள்!. குருவி தலையில் பனங்காய் வைத்த கதையாக, பெரிய நடிகர்களுக்கான சப்ஜெட்டை யோசித்த இயக்குனர்., அதற்கான பட்ஜெட்டிலும்., நட்சத்திர தேர்விலும இன்னும் கவனமாய் இருந்து திரைக்கதையிலும் சில,பல திருத்தங்கள் செய்திருந்தார் என்றால் முருகாற்றுப்படை போற்றி பாடும் படி இருந்தருக்கும்!. ஆனால், அதையும் மீறி., கணேஷ் ராகவேந்திராவின் இசையில் பாடல்களும், செந்தில்குமாரின் ஒளிப்பதிவில் பளீரிடும் படக்காட்சிகளும் ஆறுதங்!.
மொத்தத்தில் கே.முருகானந்தத்தின் முருகாற்றுப்படை, அறுபடையும் அல்ல...வசூல் அறுவடையுமல்ல!. ஆறுதல்பட!!..... |