19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஓவியர் ராஜா ரவி வர்மாவின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளிவந்துள்ள படம் தான் ‛‛ரங் ரசியா. கேத்தன் மேத்தா இயக்கத்தில், ரன்தீப் ஹூடா, நந்தனா சென் நடிப்பில் வெளியாகியுள்ள இப்படத்தை தீபா ஷாகி மற்றும் ஆனந்த் மகேந்திரூ தயாரித்துள்ளனர். சரி இனி இந்தப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளதா என்று பார்ப்போம்....
இயற்கை எழில் கொஞ்சும் கேரளாவில் பிறந்த ராஜா எனும் ராஜா ரவி வர்மா, ஓவியம் வரைவதில் வல்லவர். அமைதியும், அழகு நிறைந்த அவர் மட்டுமல்லாது அவர் படைக்கும் ஒவ்வொரு ஓவியங்களும் அவ்வளவு அழகாக இருக்கிறது. ராஜாவின் இந்த திறமையை அவரது மனைவி உள்ளிட்ட யாரும் கண்டு கொள்வதும் கிடையாது, பாராட்டவும் கிடையாது, இதனால் ஒருக்கட்டத்தில் தனது மனைவியை பிரியும் ராஜா ரவி வர்மா மும்பைக்கு இடம்பெயருகிறார்.
மும்பைக்கு வரும் ராஜா ரவி வர்மா, இந்து கடவுளின் உருவங்களை ஓவியமாக வரைகிறார், இவரது இந்த ஓவியங்கள் அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்துகிறது, மேலும் அங்குள்ள மத தலைவர் சிந்தாமணி எனும் தர்ஷன் ஜாரிவாலாவின் கோபத்திற்கும் ஆளாகிறார். ஆனாலும் ரவி வர்மா, தொடர்ந்து சுகந்தா(நந்தனா சென்) எனும் பாலியல் தொழிலாளியை கொண்டு கடவுளின் உருவங்களை ஓவியமாக வரைகிறார், ரவி வர்மாவின் இந்த செயல் மேன்மக்களை கோபமடைய செய்கிறது. ஆனால் அதேசமயம் கோவிலுக்குள் செல்ல முடியாத தாழ்த்தப்பட்ட ஏழை மக்களின் வீடுகளில் இவரது ஓவிய படங்கள் அலங்கரிக்கிறது. இதனால் மேன் மக்கள், ராஜா ரவி வர்மா மீது வழக்கு போடுகின்றனர், ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தனது ஓவியத்திலேயே கவனம் செலுத்துகிறார் ராஜா ரவி வர்மா. இதுஒருபுறம் இருக்க நந்தனாவின் நிர்வாண படத்தை வரையும்ரவி வர்மா, அந்தபடம் மக்களின் முன்னிலைக்கு வர, ரவி வர்மா மீதான கோபம் இன்னும் அதிகமாகிறது, அதிலிருந்து அவர் இப்படி மீண்டு வருகிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.
ராஜா ரவி வர்மாவாக நடித்துள்ள ரன்தீப் ஹூடாவின் நடிப்பு மிகவும் அருமை, அவரின் ஒவ்வொரு நடிப்பிற்கும் தியேட்டரில் ரசிகர்களின் கைதட்டலை அள்ளுகிறார்.
அமைதியும், அழகும் நிறைந்த சுகந்தாவாக வரும் நந்தனா சென், தனது காந்த விழிகளால் ரசிகர்களை கவர்ந்திழுக்கிறார். குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியில் அவரது நடிப்பு வாவ் சொல்ல வைக்கிறது.
ரன்தீப் ஹூடா, நந்தனா சென் மாதிரியே பரேஷ் ராவல், விக்ரம் கோக்லே, தர்ஷன், வசீர் ஆகியோரும் தங்களது கேரக்டரை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
இயக்குநர் கேத்தன் மேத்தாவின் கதை, திரைக்கதை, வசனம் படத்திற்கு நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்துள்ளது, அதற்கு பக்கபலமாக சந்தேஷ் சண்டிலியாவின் இனிய இசை, அனில் மேத்தாவின் ஓவிய ஒளிப்பதிவு, இவையெல்லாம் சேர்ந்து இயக்குநர் கேத்தன் மேத்தாவின் எழுத்து-இயக்கத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன.
ரங் ரசியா படத்தின் கதையும், அது படமாக்கப்பட்ட விதமும் அற்புதமாக உள்ளது, அதற்காகவே இந்தப்படத்தை பார்க்கலாம்.
மொத்தத்தில், ‛‛ரங் ரசியா - இதயத்தை வருடும் அழகு ஓவியம்! |